குடும்பம் ஒரு கதம்பம்

     
                     குடும்பம் ஒரு கதம்பம்
onlinesalahiblogspot.com

திருக் குர்ஆனின் தேன் துளிகள் பாகம் 1
لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِّنْ أَنفُسِهِمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ 
وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ
அல்லாஹ் முஃமின்களுக்கு பேருபகாரம் புரிந்து விட்டான்.அவர்களின் நலனில் (அக்கறைகொண்டு)அவர்களின் இனத்திலிருந்தே ஒரு தூதரை அனுப்பியுள்ளான்,அவர் அவனது ஆயத்துக்களை ஓதிக்காட்டுகிறார்.அவர்களைத் தூய்மையானவர்களாக ஆக்குகிறார்.அவர்களுக்கு வேதத்தையும் கற்றுக் கொடுக்கிறார்.இதற்கு முன்பு அவர்கள் பெரும் வழிகேட்டில் இருந்தார்கள்.(அல் குர்ஆன் 3:164)

மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக மனித இனத்திலிருந்தே ஒரு தூதரை தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இறைவனால் மனித சமுதாயத்திற்கு அளிக்கப்பட்ட மாபெரும் சனமானம் என்பதை இத்திருவசனம் சுட்டிக் காட்டுகிறது.
இறைத்தூதராக நபி(ஸல்) அவர்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களாக அமைந்திருப்பதால் அவர்களும் மனிதர் தானே!அவர்களைப் போன்று நாம் ஏன் செயலாற்ற முடியாது என்ற எண்ணம் அவர்களை விசுவாசிப்பவர்களுக்கு எழுந்து அவர்களை முழுக்க முழுக்க பின்பற்ற முனைவார்கள்.நாயகத்தோழர்கள் அவ்வாறு முனைந்திருப்பதை சரித்திரத்தில் காண முடிகிறது.நாயகத்தை முழுக்க முழுக்க பின்பற்ற முனைந்த ஸஹாபாக்களின் ஹழ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் மிகவும் பிரசித்தி பெற்றவர்களாக திகழ்ந்தார்கள்.
மலக்கு இனத்திலிருந்தோ,ஜின் இனத்திலிருந்தோ,இன்னும் பிற படைப் பினத்திலிருந்தோ ஒரு இறைத் தூதரைத் தெரிவு செய்யப்பட்டிருந்தால் மனித இனத்தவரிடமிருந்து முழுமையான பின்பற்றுதலை எதிர் பார்க்க முடியாது."இறைவன் மனிதனாக பிறக்க வேண்டும்"என்று தத்துவம் கூறத் தலைப்பட்டு விடுவார்கள்.மனிதனாக வாழ்ந்து பார்த்தால் தானே வாழ்க்கையின் கஷ்ட நஷ்டமெல்லாம் தூதுவருக்கு புரியும் என்று வேதாந்தம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மனித இனத்தைச் சார்ந்தவர்களாக அமைந்து விட்டதால் வாழ்க்கையின் ஒவ்வொரு மேடு பள்ளங்களையும் கடந்திருக்கிறார்கள்.வாழ்க்கைப் பாதையின் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் எவ்வாறு நடக்க வேண்டும் என்று உபதேசித்து அதற்கு முன் மாதிரியாக வாழ்ந்து காட்டி சென்றிருக்கிறார்கள்.உலகில் ஒவ்வொரு துறைக்கும் அவர்களே சிறந்த முன் மாதிரி என்பதை உலகளாவிய சரித்திரத்தை ஆய்வோர் கண்டு கொள்ள முடியும்.
لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ
 நபி (ஸல்)அவர்களிலே உங்களுக்கு சிறந்த முன்மாதிரி அமைந்துள்ளது.(அல் குர்ஆன் 33:21)
சாமானியன் முதல் சாலச் சிறந்தவன் வரை அனைவரையும் திக்கு முக்காடச் செய்யும் பிரச்சனை,குடும்ப வாழ்வைப் பற்றியதாகும் அறிவிற் சிறந்தோர் அரசியல் வல்லவர்களில் பெரும்பாலோர் இல்லற வாழ்வில் தோல்வி கண்டிருப்பதை மறுக்க முடியாது.தொழில் துறையில் முன்னேற்றமாக இருக்கும் எத்தனையோ நபர்கள் தங்கள் குடும்பத்தை கவனிக்க நேரமில்லாமல்,குழந்தைகளுக்கு ஊட்ட பொழுதில்லாமல் தங்கள் குடும்பத்திரனை தான் தோன்றிகளாக அலைய விட்டிருப்பது கண்கூடு. பொது நலத்தொண்டில் தங்களை அர்பணித்துக் கொண்டவர்களில் பலர் தங்களின் குடும்பத்தை திசை தெரியாத முக்கிலே திண்டாட விட்டிருப்பதைக் காணலாம்.பக்தி சிரத்தையாக வாழும் எத்தனையோ மக்கள் தங்கள் விட்டவர்களை வழி நடத்த வகை தெரியாமல் வாழ்வதைக் காண்கிறோம்.
ஆனால் அண்ணலெம் பெருமானார் (ஸல்)அவர்கள் மிகச் சிறந்த அறிஞராக,ஆட்சியாளராக, பொது நலத் தியாகியாக,பக்தி சீலராக இருந்தும் தன் குடும்பத்தினருக்கு அளிக்க வேண்டிய உரிமையில்,கடமையில் சற்றும் குறை வைக்கவில்லை.
மனிதன் எத்துணை அலுவல்களில் ஈடுபட்டாலும் அது குடும்பத்தை வழி நடத்திச் செல்வதற்கு இடையூறாக ஆகாது என்பது இறைதூதரின் வழி காட்டுதலிலிருந்து விளங்குகிறது.

குடும்ப ரகசியம்:
அன்னை ஆயிஷா (ரழி)அவர்களிடம் நபி(ஸல்)அவர்கள் வீட்டிற்கு வந்தவுடன் என்ன செய்வார்கள் என்று வினவப்பட்டது அதற்கு அவர்கள் "பல்துலக்குவார்கள்"என பதிலுரைத்தார்கள்.
ஒவ்வொரு கணவனும் தன் மனைவி தனது கானுக்கு அழகாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறான்.அனால் அதே நேரத்தில் நாமும் கண்ணுக்கு அழகாக உடுத்தி,நறுமணமும்,நற்குணமும் குடிகொண்டவராக இருப்பதை நம் மனைவி எதிர்பார்ப்பாளே என்று அந்த கணவன் நினைப்பதில்லை.
وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ
"அந்த மனைவியர்க்கு சில கடைமைகள் இருப்பது போன்றே சில எதிர்பார்ப்புகளும் உண்டு" (2:228)என்ற இறைவாக்கை மறந்து நிற்கும் ஆடவர்கள் எத்தனை எத்தனைபேர் ?நீங்கள் வீட்டினுள் நுழைந்ததும் உங்கள் மனைவியுடன் உறவாட வேண்டி வரும்.அப்போது உங்கள் வாயிலிருந்து துர்வாடை வருவதை அவள் விரும்பமாட்டாள்.அவளுடைய விருப்பத்தையும் நீங்கள் கவனிக்க வேண்டும்.எனவே வீட்டினுள் நுழைந்ததும் பல் துலக்கிக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் செய்து காட்டியுள்ளார்கள்.
புகைப் பொருட்களையும்,போதைப் பொருட்களையும் உபயோகித்து அப்புகையிலேயே,போதையிலேயே மனைவியுடன் உறவாடுபவர்கள் ஏன் மனைவியரின் வெறுப்புக்கு ஆளாக மாட்டார்கள் ?
காலத்தின் பெரும் பகுதியை கணவன் வெளி உலகிலே கழிக்க வேண்டியிருக்கலாம்.இருப்பினும் வீட்டிற்கு வந்து விட்டால் வெளி உலகின் பாதிப்புகளை மனைவி மக்களிடம் காட்டாமல் கிடைத்த சிறிது நேரத்தை இன்பமாக கழிப்பதே இல் வாழ்வில் இன்றியமையாததாகும்.
وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ
சிறந்த முறையில் அந்த பெண்களுடன் இல்லற வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளுங்கள் (அல் குர்ஆன் 4:19)
நபி நாயகம்(ஸல்)தனது நேரத்தின் பெரும் பகுதியை இறை வழிபாட்டிலும் மற்றொரு பகுதியை நடப்பிலும்,நண்பர்களுடனும் கழித்தாலும்,தனது மனைவியருடன் உறவாடுவதற்கென ஒரு பகுதியை ஒதுக்கி,அதில் வெளி உலக கோபதாபங்கள் பிரதிபலிக்காத வண்ணம் மனைவியருடன் இன்பமாக கழித்து வழி காட்டியுள்ளார்கள்.
இரவெல்லாம் நின்று வணங்கி இறைவனின் அன்பில் திழைத்தாலும் இரவின் பிற்பகுதியில் "கல்லிமீ யா ஆயிஷா!" :ஆயிஷாவே ஏதாவது பேசு"என்று கூறிபேசிக் கொண்டிருந்து பொழுது போக்குவதில் குறைவு செய்ததில்லை.
கிடைத்த சந்தர்ப்பத்தில் மனைவியருடன் எவ்வாறு இவ்வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஆயிஷா(ரழி)அவர்கள் அறிவிக்கும் ஹதீதுகள் சிறந்த சான்றுகளாகும்.
நானும்,நாயகமும் ஒரே பானையில் தண்ணீர் வைத்து குளிப்போம்.சமயத்தில் தண்ணீர் அள்ளும் பாத்திரத்தை அவர்கள் வைத்துக் கொண்டு விளையாட்டுக் காட்டுவார்கள்.தாருங்கள் தாருங்கள் என்று நான் பிடுங்குவேன் (அல் ஹதீஸ்)
நானும்,நாயகமும் ஒரே தட்டில் உணவருந்துவோம்.ஒரே இறைச்சி துண்டை அவர்கள் ஒரு பக்கத்தில் கடிப்பார்கள்,நான் மற்றொரு பக்கத்தில் பிடித்துக் கடித்திழுப்பேன்.(அல் ஹதீஸ்)
எங்காவது பிரயாணத்தை மேற்கொள்ளும் போது நானும்,நாயகமும் தனித்திருக்கும் சந்தர்ப்பம் கிடைத்தால் ஓட்டப் பந்தயம் விளையாடுவோம்.முதல் முறை நான் வெற்றியடைந்தேன்.மற்றொரு முறை நான் தோல்வியடைந்தேன்.அப்போது நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் இதற்கு அது பகரம் என்று கூறினார்கள்.
(அல் ஹதீஸ்)
மனைவி என்பவள் கணவனுக்கு இன்பத்தின் துணை மட்டுமல்ல,அவன் வெளியிற் சென்ற போது அவனது செல்வதைப் பாதுகாக்கும் காவலாளியாகவும்,அவனது வேலைகளை செய்யும் வேலைக்காரியாகவும்,யோசனை சொல்லும் மந்திரியாகவும்,அவன் நோயுற்றால் பனி செய்யும் தாதியாகவும்,பின் தூங்கி முன் எழுந்து அவனைக் கண் இமைபோல் காக்கும் தாயாகவும் திகழுகிறாள்.எனவே அவளுக்கு எவ்வாறு மதிப்பளிக்க வேண்டும் என்பதை நபி(ஸல்)அவர்கள் அழகாகச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
இந்த பெண்கள் கணவன் நல்லவனாக இருந்தால் மிஞ்சி நடப்பார்கள்.கணவன் அற்பனாக இருந்தால் அவன் அவர்களை அடக்கியாழ்வான்.ஆனால் நான் மிஞ்சப்படும் நல்லவனாகவே இருக்க விரும்புகிறேன்.(அல் ஹதீஸ்)
மனைவியிடம் நல்லவராக ஆவோரே உங்களில் நல்லவராக ஆவார்.நான் என் மனைவியர்க்கு நல்லவராக இருக்கிறேன்.(அல் ஹதீஸ்)
அன்னை ஆயிஷா (ரழி)அவர்களிடம் "அண்ணல் பெருமானார் (ஸல்)இல்லத்தில் இருக்கும்போது என்ன செய்து கொண்டிருப்பார்கள்?"என்று வினவப்பட்டது.அதற்கு அவர்கள் வீட்டு வேளைகளில் எங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.ஆட்டில் பால் கறப்பார்கள்.துணிகளை தைப்பார்கள்.செருப்பை சீர் செய்வார்கள்.வீட்டை சுத்தம் செய்வார்கள் என்று பதிலுரைத்தார்கள்.(அல் ஹதீஸ்)

மனைவி சிறந்த மந்திரி:-
மனைவியர்க்கு கௌரவம் அளிக்க வேண்டும்.அவர்கள் நமக்கு ஆலோசனை வழங்கினால் அந்த யோசனை நன்மை பயக்குமெனில் அதை ஏற்கப் பின்தங்கக்கூடாது என்பதை பின் வரும் சம்பவம் விளக்குகிறது.
ஹிஜ்ரீ 6-ஆம் வருடம் நபி(ஸல்)அவர்கள் 1500 ஸஹாபாக்களுடன் உம்ரா செய்வதற்காக மக்கா செல்கிறார்கள்.ஆனால் வழியிலேயே குறைஷிகள் மக்கா செல்ல விடாமல் விடுகிறார்கள்.முடிவில்.நீங்கள் இவ்வாண்டு திரும்பிச் சென்று விட்டு அடுத்த ஆண்டு வாருங்கள் வழி விடுகிறோம் என்று கூறினார்கள்.அதை குறிக்கும் வகையில் ஹுதைபிய்யா உடன் படிக்கை கையெழுத்தானது.
நபி(ஸல்)அவர்கள் ஸஹாபாக்களிடம் உம்ராவுக்காக கட்டி இருந்த "இஹ்ராமை"நீங்கச் சொல்கிறார்கள் ஸஹாபாக்களுக்கோ விருப்பமில்லை.
மக்காவுக்கு செல்லலாம் என்ற கட்டுக் கடங்கா ஆசையுடன் வந்த அவர்களுக்கு அந்த ஆசை நிறைவேறாமல் போனதும் துக்கம் பீறிட்டுக் கொண்டு வந்தது.எனவே நாயகத்தின் கட்டளையை உடனே ஏற்க யாரும் முன்வரவில்லை.நாயகம் (ஸல்)அவர்களுக்கு நிலைமையை சமாளிப்பது சிரமமாகி விடுகின்றது.கூடாரத்துக்குள் சிந்தனை வயக்கப்பட்டவர்களாக குறுக்கும் நெடுக்குமாக நடைபோடுகிறார்கள்.
அதை கண்ணுற்ற அவர்களின் நாயகி ஹழ்ரத் உம்முஸலமா (ரழி)அவர்கள் "நாயகமே!நான் கூறும்படி செய்யுங்கள்.தற்போது நீங்கள் வெளியில் செல்லுங்கள்.யாருடனும் பேசாமல் உங்களது தலைரோமத்தை களைத்து இஹ்ராமை நீக்கிக் கொண்டு வாருங்கள் என்றார்கள்.நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் மனைவியின் அந்த ஆலோசனையை ஏற்று செயலாற்றினார்கள்.என்னே ஆச்சிரியம்!ஸஹாபாக்கள் அனைவரும் தங்கள் தங்கள் உரோமங்களை நீக்கி இஹ்ராமை முறித்துக் கொண்டார்கள்.

உடல்கள்:-
இல்லற வாழ்க்கையில் கணவன் மனைவிக்கிடையில் ஊடல்கள்,சிறுசிறு பிணக்குகள் ஏற்படுவது சகஜம்.அப்போது இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்து குடும்பத்தை நடத்திச் செல்லவேண்டும்.சிறுசிறு பிணக்குகளை பெரும் பிரச்சனையாக உருவாக்கி விடலாகாது.
ஒரு சமயம் நபி (ஸல்)அவர்களுக்கும் அன்னை ஆயிஷா (ரழி)அவர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விடுகிறது.ஹழ்ரத் அபூபக்கர் (ரழி)அவர்களை நடுவராக நியமித்தார்கள்.தன் மனைவியை நோக்கி ஆயிஷாவே!நீ உன் கட்சியை முதலில் உரைக்கிறாயா?நான் கூறட்டுமா?என்று நபி(ஸல்)அவர்கள் கேட்டார்கள்.அது கேட்ட ஆயிஷா(ரழி)அவர்கள் "நான் முதலில் என் பிரச்சனையைக் கூறுவேன்"என்றார்கள்.நடுவராக இருந்த ஹழ்ரத் அபூபக்கர் (ரழி)அவர்கள் தன் மகளை நோக்கி என்ன ரஸூலுல்லாஹி (ஸல்)அவர்களை முந்திப் பேசுகிறாயா?என்று கோபமாக கூறி கன்னத்தில் அடித்து விட்டார்கள்.அதைக் கண்ணுற்ற நாயகம்(ஸல்)அவர்கள் "நீங்கள் நடுவராக வந்திருக்கிறீர்களா?அல்லது சண்டையிட வந்திருக்கிறீர்களா?என்று கடிந்துரைத்து விட்டு தன் மனைவியிடம் தானே சமாதானம் செய்து கொண்டார்கள்.

கண்டிப்பு:-
மனைவிக்கு சலுகை காட்ட வேண்டிய சந்தர்ப்பத்தில் சலுகை காட்டவேண்டியதுதான்.அதேபோன்று கண்டிக்க வேண்டிய தருணத்தில் கண்டிக்கவும் தவறக்கூடாது.
ஒருசமயம் நாயகத்தின் மனைவியர்கள் :நீங்கள் எங்களுக்கு அளிக்கும் உணவு தொகை போதாது என்றொரு பிரச்சனையைக் கிளப்புகிறார்கள்.அது பெரும் பிரச்சையாக உருவாகி விடுகிறது.நபி (ஸல்)அவர்கள் அப்பிரச்சனைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுகாண முயலுகிறார்கள்.முடியவில்லை.உடனே உங்களில் யாருடனும் நான் தொடர்பு வைக்கமாட்டேன் என்று கூறி ஒரு மாதம் பிரிந்து வாழ்ந்தார்கள்.பிரிவாற்றாமை தாளாமல் மனைவியர்கள் வழிக்கு வந்து விட்டார்கள்.
வாழ்க்கையின் கஷ்ட நஷ்டத்தில் ஒத்துப்போவது மனைவியின் கடமை.அதில் அவள் தவறும்போது அவளைப் படுக்கையிலிருந்து பிரித்து போடுவது சிறந்த தண்டனையாகும் என்பதை மேற்கூறிய சம்பவம் உணர்த்துகிறது.அதையே அல்லாஹு தஆலாவும் கட்டளையாக பிறப்பிக்கிறான்.
ஒத்துப்போகாத தன்மையை உணர்ந்த பெண்மக்களுக்கு உபதேசம் புரியுங்கள்.படுக்கையில் பிரித்து விடுங்கள்.அடியுங்கள்.
(அல் குர்ஆன் 4:34)
கண்டிக்கும் போதும் மனைவிக்கு கேவலம் ஏற்படாதவாறு இங்கிதமாக நடந்து கொள்ள வேண்டு மென்பது நபி(ஸல்)அவர்களின் போதனையாகும்.

அடிமையை அடிப்பதைப் போன்று தன் மனைவியை எவரும் அடிக்கவேண்டாம்.பின்னர்  அன்றைய பொழுதின் பிற்பகுதியிலே உறவும் கொள்வீர்கள்.முகத்தில் அடிக்காதீர்கள்,ஏசாதீர்கள்.வீட்டில் வைத்தே தவிர கண்டிக்க வேண்டாம்.(அல் ஹதீஸ்)

சந்தேகம் வேண்டாம் :-
நம் மனைவியரைப் பற்றி ஒரு தவறான செய்தி கிடைத்தால் உடனே அதை நம்பி விடலாகாது.தீர்க்க ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும் என்பது நபி(ஸல்)அவர்களின் வழிகாட்டுதலாகும்.
ஒரு சமயம் ஒரு யுத்தத்திற்கு சென்று திரும்ப ஆயத்தமாகும் போது அன்னை ஆயிஷா (ரழி) மலஜலம் கழிப்பதற்காகச் சென்றார்கள்.கழுத்தில் கிடந்த பவள மாலை ஒன்று காணாமற் போய்விட்டது.அதை தேடுவதில் சற்று தாமதம் ஏற்பட்டு விட்டது.
ஆயிஷா (ரழி) அவர்கள் வெளியிற் சென்றதை அறியாத நாயகம் (ஸல்)அவர்கள் பிரயாணத்தை துவங்க உத்தரவிட்டு விட்டார்கள்.
ஆயிஷா (ரழி) தங்கியிருந்த ஒட்டகத்தை ஒட்டி வந்தவர்கள்,அவர்கள் உள்ளே அமர்ந்துள்ளார்கள் என்ற எண்ணத்தில் ஒட்டகத் தொட்டியை ஒட்டகத்தில் தூக்கி வைத்துக் கட்டிச் சென்று விட்டார்கள்.
திரும்பி வந்த ஆயிஷா (ரழி) அவர்களுக்கு பெரும் ஏமாற்றமே காத்திருந்தது.எப்படியும் சென்றவர்கள் தன்னைக் காணாது திரும்பி இங்கே தான் வந்து தேடுவார்கள் என்று கருதி அங்கு தங்கிவிடுகிறார்கள்.பிரயாணக் கூட்டம் ஏதும் பொருள்களை விட்டுச் சென்றால் அதை எடுத்து வரும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ஹழ்ரத் சப்வான் (ரழி) என்ற நாயகத் தோழர் அச்சமயம் அங்கு வருகிறார்.ஆயிஷா நாயகத்தை அடையாளம் கண்டு "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"என்று கூறி விடுகிறார்கள்.அது தவிர வேறு எதுவும் பேசவில்லை.அவர் ஒட்டகத்தை படுக்க வைத்தார்:ஆயிஷா (ரழி) ஏறிக்கொண்டார்கள்.அவர் ஒட்டகத்தை நடத்திக் கொண்டு வந்து,நாயகத்திடம் சேர்ப்பித்தார்.
எதிர்பாராது நடந்த இந்த சம்பவம் பற்றி சில முனாஃபிக்குகள் தவறாக விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.அந்த அவதூறு காட்டுத்தீபோல பரவ ஆரம்பித்துவிட்டது.நபி(ஸல்) அவரகள் மிகுந்த நிதானத்தை கடைப்பிடித்தார்கள்.பின்னர் இறைவன் "ஆயிஷா நாயகி உத்தமி"என்று நிரூபித்து சூரத்துன் நூர் அத்தியாயத்தில் 10 திருவசனங்களை அருளினான்.
இவை போன்ற படிப்பினைகள் நபி (ஸல்)அவர்களின் வாழ்க்கையில் அனந்தம் அனந்தம்.ஆம் அவர்கள் மனித இனத்தவராக அமைந்திருப்பதாலன்றோ நமக்கு இத்தனை படிப்பினைகள் கிடைத்தன.அவர்களின் வாழ்வை பின்பற்றுவோமாக!வளமான வாழ்வைப் பெறுவோமாக!வஆகிரு
தஃவானா அனில் ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்.

குறிப்பு:-
எங்களின் ஆசான் கன்ஜூல் உலூம் ஷைகுனா ஓ எம் அப்துல் காதிர் பாகவி ஹழ்ரத் பெருந்தகை அவர்களின் பெரும் முயற்சியால், பல ஆலிம்களின் ஜுமுஆ பயானின் குறிப்பிற்காக வெளிவந்த,பல ஆலிம்களின் மனதிலும் நினைவாய் மலர்ந்த "திருக் குர்ஆனின் தேன்துளிகள்"
இன்ஷா அல்லாஹ் நான்கு பாகமும் இந்த (இணைய தளத்தின்) ஆன் லைன் ஸலாஹி மூலம்,
ஹழ்ரத்தின் அனுமதியோடு முதல் பாகத்தின் முதல் கட்டுரை "குடும்பம் ஒரு கதம்பம்"வெளியாகிவிட்டது.அடுத்தடுத்த கட்டுரைகள் வெளிவரும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.


மகிழ்வோடு.....
ஸலாஹி உலமா பேரவை







 
                   

Comments

  1. அருமையான கட்டுரை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. تبيين الحسنة يا اخي

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நாம் செய்த அமல்களை பாதுகாப்போம்

ரமழானே வருக

இன்றைய நிகழ்வும் உலக அழிவின் அடையாளமும்